தண்டோரா போட்டு அறிவிப்பு வெளியிட தடை: தலைமைச் செயலாளர்

சென்னை: தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள் பொது மக்களுக்கு முக்கிய செய்திகளை தண்டோரா போட்டு சொல்வதற்கு தடைவிதிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களை அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தற்போது மக்களிடம் முக்கிய செய்திகளை விரைவாக கொண்டு சேர்ப்பதற்கு இன்னும் சில ஊர்களில் தண்டோரா போடும் பழக்கம் இருக்கிறது. அதனை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வேதனைப்படுவதை கண்டேன். தற்போது அறிவியல் வளர்ந்துவிட்டது, தொழிநுட்பமும் பெருகிவிட்டது.

இந்த சூழ்நிலையில் தண்டோரா போடுவது இன்னும் தொடரவேண்டியது தேவையில்லை. ஒலிபெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி அறிவிப்பு வெளியடலாம். இதன் மூலம் செய்திகளை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்க முடியும். எனவே தண்டோரா போடுவதற்கு கடுமையான தடை விதிப்பது நல்லது. தடையை மீறி தண்டோரா போடும் பணியில் ஆட்களை ஈடுபடுத்தினால் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த செய்தி ஊராட்சி அமைப்புகள் வரை சென்றடையும் வகையில் பரவலான விழிப்புணர்வை மாவட்ட ஆட்சியர்கள் ஏற்படுத்தவேண்டும். என்று தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.